2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நிலவில் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், அதற்கான பணிகளில் நோக்கியா முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா ஈடுபட்டுள்ள அதே வேளையில், நிலவில் நெட்வொர்க் சேவையை வழங்க நோக்கியா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பு குறித்த ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் எனவும், விண்வெளி வீரர்களுக்கு தகவல் தொடர்பு சேவைகள் எளிதாக்கப்படும் எனவும், நோக்கியா தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணையுடன் நோக்கியா செயல்படுத்த உள்ளது. இதற்காக, நோவா சி லூனார் லேண்டர் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் ரோவர் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், லேண்டருக்கும் ரோவருக்கும் இடையே எல்டிஇ இணைப்பு அமைக்கப்பட்டு, நெட்வொர்க் சேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதன் பின்னர், முக்கியமான கட்டளைகள் மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாடுகளை நிலவில் உள்ள ரோவர்களுக்கு இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.