ரஷ்யாவை சேர்ந்த போரிஸ் நாடேஷ்டின், உக்ரைன் மீது போர் தொடுத்ததை எதிர்த்தவர் ஆவார். இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விதிகளின்படி, அதிபர் வேட்பாளராக களம் இறங்குபவர், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஆதரவாளர்களின் கையெழுத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த கையெழுத்துகளில் 5% அளவில் செல்லாதவை என அறியப்பட்டால், அவரது வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு. அதன்படி, போரிஸ் நாடேஷ்டின் சமர்ப்பித்த கையெழுத்துகளில் 9000 க்கும் மேற்பட்டவை செல்லாதவை என அறிவிக்கப்பட்டு, அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தான் சமர்ப்பித்த கையெழுத்துக்கள் உண்மையானவை என்பதை நிரூபிக்க போரிஸ் கால அவகாசம் கூறியதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கு மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.