ஏவுகணைகளை செலுத்தும் வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்க கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியா உடன் அமெரிக்கா இணைந்து கொரியா தீபகற்பத்தில் போர் பயிற்சி மேற்கொண்டு வருவது வடகொரியாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நீண்ட காலம் மோதல் இருந்து வருகிறது. அவ்வப்போது தங்களுடைய ஆயுத பலத்தை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அதிகரித்து வருகிறார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்கு ரஷ்யாவுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை லாஞ்சகர்களை வடகொரியா வழங்கி உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்நிலையில் ஏவுகணைகளை செலுத்தும் மொபைல் லான்ச் வாகனங்களை இன்னும் அதிக அளவில் தயாரிக்க வடகொரியா அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். இந்த வாகனம் மூலம் வடகொரியாவின் எந்த பகுதியில் இருந்தும் ஏவுகணைகளை செலுத்த முடியும். முன்னதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆத்திரமூட்டும்படி செயல்பட்டால் அவர்களை முற்றிலும் அழித்து விடுங்கள் என்று ராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்காக அணு ஆயுதங்களை தயார் நிலையில் அதிக அளவில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
தென் கொரியாவின் கடலோர தீவான யோன் பியாங் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் அறிவுறுத்தியது. இதனால் தென்கொரியா மற்றும் வடகொரியாவுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.