தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியது. அதன்படி 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், சமீபத்தில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், வடகிழக்கு பருவமழை , தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .
தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 48 சதவீதம் வட கிழக்கு பருவமழைக் காலத்தில் தான் பெய்கிறது. இதில், கடலோரப் பகுதிகளுக்கு 60 சதவீதமும் மற்ற பகுதிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை கிடைக்கும். இதற்கிடையே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 1ம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.