வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி அதிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவும், பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திட தேவையான நடவடிக்கைள் எடுத்திட வேண்டும். பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.