வெளிநாடு வாழ் இந்தியர்கள், இனிமேல், பணம் செலுத்துவதற்கு பாரத் பெல் பேமென்ட் சிஸ்டம் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார். தற்போது, அதனை செயல்படுத்தியதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முறைப்படுத்தப்பட்ட ரசீதுகளுக்கான கட்டணத்தை செலுத்த பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் என்ற தளம் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த தளத்தில் 20000 க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் செயல்படுகின்றன. மேலும், ஒரு மாதத்திற்கு 8 கோடிக்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. தற்போது, இந்த தளத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினரின் ரசீதுக்களுக்கு பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினரின் கல்வி கட்டணம், இதர பயன்பாட்டு கட்டணம் போன்றவற்றை இந்த தளத்தின் மூலம் நேரடியாகச் செலுத்த முடியும். இதனால், இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் பெரிதும் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. ரூபி டிராயிங் அரேஞ்ச்மென்ட் மூலம் நேரடியாக வெளிநாட்டு கணக்கில் இருந்து இந்திய வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த முடியும். அந்த விதத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.