கென்யாவில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி, பல பேர் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ‘உண்ணா நோன்பிருந்து உயிரை நீத்தால் சொர்க்கத்தை அடையலாம்’ என்று கூறப்பட்டதால், அப்பாவி பொதுமக்கள் பலர் இந்த செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கென்யா காவல்துறையினர் தற்போது வரை 47 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர்.
குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் சபையை சேர்ந்தவர்கள் இந்த செய்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த மாத தொடக்கத்தில் இந்த குழுவை சேர்ந்த 15 பேரை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் தேடுதல் பணி நடத்தப்பட்டு, உயிர் நீத்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. சக்கஹோலா காட்டுப்பகுதிக்குள் நடத்தப்பட்ட தேடலில், இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தேவாலயத்தின் தலைவர் பால் மெக்கன்சி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரும், உணவு மற்றும் தண்ணீர் அருந்த மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும், 800 ஏக்கர் பரப்பரப்பு கொண்ட ஒட்டுமொத்த காடும் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டு காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.














