இந்தியாவில், தற்பொழுது, ஓமிக்ரோன் பிஏ 2.75.2 வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளைப் பரிசோதனை செய்ததில் 90% நோயாளிகளுக்கு இந்த வகை ஓமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மரபணுக்களை வரிசைப்படுத்தும் நிறுவனமான INSACOG வின் மகாராஷ்டிரா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ராஜேஷ் காரியகர்த்த, இதுகுறித்த உறுதியான தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும், பிஏ 2.75.2 வகை ஓமிக்ரோன் வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஏ 2.75.2 வகை ஓமிக்ரோன் வைரஸ், இந்தியா, சிலி, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 8 உலக நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பேக்கிங் (Peking) பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் ஒருவர், ட்விட்டரில், பிஏ 2.75.2 வகை ஓமிக்ரோன் வைரஸ்தான், இருப்பதிலேயே அதிக வீரியம் உள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குவதில் இந்த வகை வைரஸ் அதிக வீரியத்துடன் செயல்படுவதாக பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கூறி வருகின்றனர்.
மற்றொரு INSACOG விஞ்ஞானி கூறுகையில், “பிஏ 2.75 வகை ஓமிக்ரோன் வைரஸ், பிஏ 4 மற்றும் பிஏ 5 ஆக உருமாறியது. அதனால்,உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் பிஏ 2.75.2 வகை ஓமிக்ரோன் வைரஸ் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இதுவே, அதிக வீரியம் உள்ளதாகவும், தொடர் உருமாற்றம் அடைவதாகவும் கருதப்படுகிறது” என்றார். அத்துடன், இந்த வகை வைரசின் உருமாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பதால், தடுப்பூசிகளைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.