அர்ஜென்டினாவில், உள்ளூர் அணிகளுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள Carmelo Zerillo மைதானத்தில், Boca Juniors மற்றும் Gimnasia y Esgrima அணிகள் மோதிய கால்பந்து போட்டி வியாழனன்று நடந்தது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில், போட்டியை காண மேலும் ரசிகர் கூட்டம் குவிந்தது. சுமார் 10,000 பேர் வரை திரண்டதாகச் சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி மைதானத்திற்குள் நுழைய எத்தனித்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி கட்டுப்படுத்த துவங்கினர். ரசிகர்களை கட்டுப்படுத்த ரப்பர் புல்லட்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றையும் காவல்துறையினர் பயன்படுத்தினர். இதனால் மைதானத்திற்கு வெளியே பெரும் கலவரச்சூழல் ஏற்பட்டது. இதன் பாதிப்பு மைதானம் உள்ளேயும் பிரதிபலித்தது. எனவே, போட்டி துவங்கிய ஒன்பதாம் நிமிடத்தில் போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பாதுகாப்பின்மை காரணமாக போட்டி நிறுத்தப்படுவதாக ரெஃப்ரி அறிவித்தார்.
மைதானத்தில், கண்ணீர் புகை குண்டுகளால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து, மூச்சு விட முடியாத சூழல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், குழந்தைகள் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரப்பர் புல்லட்டுகள் தாக்கியதில் போட்டியை படம் பிடிக்க வந்த கேமரா மேன் ஒருவர் காயமடைந்துள்ளார். மூச்சு விடுவதில் ஏற்பட்ட குறைபாடு மற்றும் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 57 வயதுடைய சீசர் ரெஜூரியோ என்ற நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டிகளில் நடந்த கலவரம் காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதன் வழியே தற்போதைய கலவரமும் உயிர் இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்தில் நடைபெற்ற இந்தோனேசிய கால்பந்து கலவரத்தை தொடர்ந்து இந்தக் கலவரம் நேர்ந்துள்ளதால், உலக அளவில் கால்பந்து கலவரங்கள் குறித்த விவாதத்தை இது ஏற்படுத்தி உள்ளது.