ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டம் அமைய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், இந்தியாவின் ஓராண்டு தானிய உற்பத்தித் திறன் 31 கோடி டன்களாக இருந்தாலும் சேமிப்புத் திறன் 47 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 7 கோடி டன் தானிய சேமிப்புத் திறனை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டமாகும்.
தற்போது நாட்டின் தானிய சேமிப்பு 14.5 கோடி டன்களாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தானிய சேமிப்பு திறன் 21.5 கோடி டன்களாக அதிகரிக்கும். புதிய திட்டத்தின் மூலம் உணவு தானியம் வீணாவது தடுக்கப்படும். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மேம்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.