சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொலைத்தொடர்பு பயனாளரின் அடையாளத்தை உறுதி செய்யவும், நிறுவனங்கள் அழைப்பை பெறுவோரை அடையாளம் காணவும் இது உதவும். குறிப்பாக, தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி நடைபெறும் இணைய (சைபர்) குற்றங்களை தடுக்க இந்த மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையின் வரைவு மசோதா பிரிவு 4-ன்கீழ் துணைப் பிரிவு 7- ல் போலியான ஆவணங்கள் அல்லது அடையாளத்தை குறிப்பிட்டால் ஓராண்டு சிறை, ரூ.50,000 அபராதம், தொலைத் தொடர்பு சேவையை துண்டித்தல் அல்லது இவற்றில் ஏதேனும் இணைந்து தண்டனையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நடைபெறும் குற்றங்கள் "அறிந்தே செய்யக்கூடிய குற்றம்" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு வாரண்ட் அல்லது நீதிமன்ற அனுமதியும் இல்லாமல் குற்றவாளியை காவல்துறை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்.