சபரிமலையில் கடந்த 16ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமானது. இதனால் சாமி தரிசனத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பலர் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாமால் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவும் பிரச்சனை ஏற்பட்டது. அதனை அடுத்து கேரளா ஐகோர்ட் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தில் சிக்காமல் இருக்கவும், தேவையான அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 90 ஆயிரம் ஆக குறைக்க வேண்டும், மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம் 80000 பேருக்கு, உடனடி புக்கிங் மூலம் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நிலக்கல் மற்றும் பம்பை இடையே கூடுதல் பஸ்கள் இயக்கம் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை ஆகியவை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.