இஸ்லாமியர்களுக்கான 4 % இட ஒதுக்கீடு ரத்து உத்தரவை மே 9 ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பதில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் மே 9 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுவரை இட ஒதுக்கீடு ரத்து செய்ததை அமல்படுத்தக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக அரசும் அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தது.