அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய பாஜ அரசு இறங்கி உள்ளது. மார்ச் 1, 2020 நிலவரப்படி, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் சுமார் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு டிசம்பர் வரை அடையாளம் காணப்பட்ட ஆரம்ப நிலை காலியிடங்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் நிரப்பப்பட வேண்டும். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
2021ன் இறுதியில் நாட்டில் 255 பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 177 நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. 2021ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1.89 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. ரயில்வேயில் கிட்டத்தட்ட 2.3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என கடந்த ஜூனில் பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.