தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.