ஹாலி வால்மீன் விட்டுச் சென்ற துகள்கள் ஓரியானிட் விண்கல் பொழிவாக பூமியை வந்தடைகிறது. இந்த ஆண்டு, ஓரியானிட் விண்கல் பொழிவு அக்டோபர் 21 அன்று உச்சத்தை எட்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நாளில், இருண்ட வானில் மணிக்கு 20 விண்கற்கள் வரை பூமிக்குள் நுழைந்து எரியும் அழகிய காட்சியை நாம் காணலாம். மேலும், அதிகாலை 5 மணி அளவில் இந்த விண்கற்களை நன்றாக பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.
“அக்டோபர் 16 முதல் 26 வரை இந்த விண்கல் மழை நீடிக்கும் என்றாலும், உச்ச நிலையான அக்டோபர் 21 அன்று நிலவொளியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு, நிலவு கிப்பஸ் நிலையில் இருப்பதால், அதன் பிரகாசமான ஒளி விண்கற்களின் ஒளியை மறைத்துவிடும். இதனால், வழக்கமாக நாம் காணும் அளவுக்கு விண்கற்களை இந்த ஆண்டு பார்க்க முடியாது.” இவ்வாறு வானியலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.