தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி வெளியானது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 51.3% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில் இந்தாண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களில் 17,972 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மிகக் குறைவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீத பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய பேருக்கு நெகட்டிவ் மார்க்கிங் முறை இருந்ததுகூட தெரியவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இது அரசு பயிற்சி மையங்கள் தரத்தின் மீது கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.