வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினர் ரோஹிங்கியா மக்கள் ஆவர். அந்த நாடுகளில் அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளில் இருந்து தப்ப, அகதிகளாக வெளியேறி வருகின்றனர். பெரும்பாலும் மலேசியா நாட்டில் புலம் பெயர எண்ணி கடல் மார்க்கமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர். அவ்வாறு வெளியேறிய 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா இன மக்கள், அந்தமான் அருகே தவித்து வந்துள்ளனர்.
சிறிய படகு மூலம் மியான்மர் நாட்டிலிருந்து அவர்கள் தப்பி வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று 5 இந்திய கடற்படை கப்பல்கள் அந்த படகை கண்டறிந்தன. இதுகுறித்து பேசிய கடற்படை அதிகாரி ஒருவர், “இந்த ரோஹிங்கியா மக்கள் 2 வாரத்திற்கும் மேலாக கடலில் உள்ளனர். படகில் இருந்த நபர்களில் 16 முதல் 20 பேர் வரை, பசி, தாகம் மற்றும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்” என்று அஞ்சுவதாக கூறினார். இது குறித்து ஆசிய பசிபிக் அகதிகள் உரிமை அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.