கடந்த 2022 ஆம் ஆண்டு விண்வெளி துறையில் மிக முக்கிய ஆண்டாக கருதப்படுகிறது. இந்த வருடத்தில் மட்டுமே 200க்கும் அதிகமான புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. அதில், “2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சூரிய குடும்பத்திற்கு வெளியே 5000 கோள்கள் அறியப்பட்டிருந்தன. அதன் எண்ணிக்கை தற்போது 5235 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4% புதிய கோள்கள், பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தை போன்று பாறைகளால் ஆனவை. அத்துடன், 2023 ஆம் ஆண்டில் மேலும் பல புதிய கோள்கள் கண்டறியப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள அதிகமான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள 2 கோள்களில் பூமியைப் போன்றே நீர் வளம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.