ஒயிலாட்டம்

June 21, 2022

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களின் ரசனையோடும், கலை உணர்வோடும் சம்பந்தப்பட்டதாக நாட்டுப்புறக் கலைகள் கருதப்படுகின்றன. அந்தக் கலைகளே மனிதனின் எண்ணங்களை மகத்துவம் ஆக்குகின்றன. பழங்காலத்தில் இருந்தே தமிழக நாட்டார் ஆடற் கலையாக அறியப்படும் ஒயிலாட்டம் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படும் சிறந்த கலையாக உள்ளது. அதை பற்றிச் சிலத் தகவல்கள்: அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ‘ஒயில்’ என்ற தமிழ் வார்த்தையே, இந்த ஆட்டத்தின் காரணப் பெயராகியுள்ளது. ஒயிலாட்டம் என்பது, ஒரே […]

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களின் ரசனையோடும், கலை உணர்வோடும் சம்பந்தப்பட்டதாக நாட்டுப்புறக் கலைகள் கருதப்படுகின்றன. அந்தக் கலைகளே மனிதனின் எண்ணங்களை மகத்துவம் ஆக்குகின்றன. பழங்காலத்தில் இருந்தே தமிழக நாட்டார் ஆடற் கலையாக அறியப்படும் ஒயிலாட்டம் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படும் சிறந்த கலையாக உள்ளது. அதை பற்றிச் சிலத் தகவல்கள்:

அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ‘ஒயில்’ என்ற தமிழ் வார்த்தையே, இந்த ஆட்டத்தின் காரணப் பெயராகியுள்ளது. ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதால், இதற்கென்று வரையறுக்கப்பட்ட இலக்கணம் போன்றதொரு பொதுவான விதிமுறைகள் உள்ளன. அந்த மரபில் சிறு சிறு மாற்றங்களை உட்புகுத்தி பல்வேறு வகையான ஒயிலாட்டங்கள் இன்று நிகழ்த்தப்படுகின்றன. தொடக்கத்தில் இந்தக் கலை முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலையாக இருந்துள்ளது. கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தின் பல இடங்களில் பெண்களும் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.

ஒத்த நிறத்தினிலே
ஒய்யார தலைப்பாகை!
சுத்தி தலையில்கட்டி
ஒயிலாக ஆடிவந்தோம்!!

சிவந்த நிறத்தினிலே
துணியொன்றை கைபிடித்து!
தமிழ்மணக்கும் வீதியெல்லாம்
மயில்போல ஆடிவந்தோம்!!

என்ற கிராமியப் பாடல் ஒயிலாட்டத்தின் பொதுவான ஒப்பனையை எடுத்துக் கூறுகிறது. மேலும், ஒயிலாட்டத்தின் போது, பானைத்தாளம், தவில், சிங்கி, சோலக் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும். பானைத்தாளம் என்பது, குடத்தில் மாட்டுத்தோலைக் கட்டி இசைக்கப்படும் வல்லிசைக் கருவியாகும். பறைக்குப் பதிலாக இந்தக் கருவி ஒயிலாட்டத்தில் இசைக்கப்படுவது இந்த ஆட்டத்தின் தனித்துவமாகும். இசைக் கருவிகளோடு இணைந்து ஆட்டக்காரர்களின் கால் சலங்கையொலி ஒயிலாட்டத்தின் மிக முக்கியமான இசைக்கோர்வையாகும்.

தவளப் பானையில
குருமாட்டின் தோல்கட்டி!
வல்லிசை எழுப்பியங்கே
துள்ளி துள்ளி ஆடிவந்தோம்!!

குமரிப் பெண்போல
கிளுக்கின்னு சிரிச்சிவரும்!
கெண்டைக்கால் சலங்கையிட்டு
அடவுகட்டி ஆடிவந்தோம்!!

என்ற பாடல் வரிகள் ஒயிலாட்டத்தின் இசைக்கோர்வையை எடுத்துரைக்கின்றன. நேர்கோட்டு ஆட்டமாக இடம்பெறும் இந்த நடனத்தில் ‘அண்ணாவி’ என்று அழைக்கப்படும் ஆசிரியர் அல்லது தலைவர் வரிசைக்கு முன்னால் நின்று ஆடுவார். ஒயிலாட்டக் காரர்கள் முதலில் கடவுளுக்கு வணக்கம் செலுத்துமாறு கைகூப்பி நின்று ஒரு காலை மட்டும் தட்டித் தாளத்திற்கு ஏற்ப ஆட்டத்தை தொடங்குகின்றனர். பின்னர், தரையைத் தொட்டு வணக்கம் செலுத்தி சபையை வணங்குகின்றனர். இதன் பின்பே, ஆட்டத்தைத் துவங்குகின்றனர். ஒயிலாட்டத்தின் போது பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் இதிகாசக் கதைகளைக் கூறுவதாக இருக்கின்றன. அண்ணாவி அல்லது முன்பாட்டாளர் எனப்படுபவர் முதல் சந்தத்தை எழுப்ப, குழுவினர் அதை மீண்டும் பாடி ஆடும் முறையைப் பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். சில இடங்களில், இதிகாசங்கள் தவிர பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை, சிறுத்தொண்டர் கதை, வள்ளி திருமணக் கதைகளையும் பாடி ஆடுவதுண்டு. மரபுசார்ந்து இயங்கியப் பலக் கலைஞர்கள் கிறித்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக, கிறிஸ்தவ ஆலயங்களில் பைபிள் கதைகளைப் பாடி இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

முதலில் மெதுவான அடவுகளோடு தொடங்கும் ஆட்டம் போகப்போக வேகமெடுத்து, உச்சம் பெற்று, பின்னர் நிறைவு பெறும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக, இறுதிப் பாடலுக்கு முன்னர் அண்ணாவி சபைக்கு நன்றி கூறுவார். இறுதியாக, அனைத்து அடவுகளும் முடிந்த பின்னர், கலைஞர்கள் அனைவரும் பூமியைத் தொட்டு வணங்கி, நிகழ்ச்சியை நிறைவு செய்கின்றனர்.

ஆட்டத்தின் வேகத்தைப் பொறுத்து தக்கு, காலம் என்றும் அடவுகளின் வேகத்தைப் பொறுத்து அடி, சாரி, தட்டு என்றும் இந்த ஆட்டத்தை வகைப்படுத்துகிறார்கள். இதனை

பூப்போல அடியெடுத்து
மெதுவாக ஆடியதை!
தக்கு எனச் சொன்னாரே
தகுதியான பெரியவுக!!

புயல்போல உருவெடுத்து
உக்கிரமா ஆடியதை!
காலம் எனச் சொன்னாரே
களங்கண்ட பெரியவுக!!

என்ற வரிகள் விளக்குகின்றன. மேலும், ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் கலைஞர்களின் கழுத்துக்கு கீழேயும், இடுப்புக்கு மேலேயும் உள்ள உடல்பகுதிகள் வளையக் கூடாது என்பது பொதுவான விதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆளோடு ஆளு
உரசாமல்
உங்கள் ஆளிலே ஒரு முழம்
தள்ளி நின்று
காலோடு காலு உரசாமல்
உங்கள் கைபிடித்துணி
தவறாமல்
மேலோடு மேலு
உரசாமல்
உங்கள் வேரூவை தண்ணி
சிதறாமல்..

என்று நீளும் பாடல் ஒயிலாட்டத்தின் இலக்கணங்களை வரையறுக்கிறது. ஒயிலாட்டத்தைப் போலவே ஆடப்படுவது தேவராட்டம் ஆகும். தேவராட்டத்தில் தேவதுந்துபி எனப்படும் தோலிசைக் கருவி இசைக்கப்பட, பாடல் ஏதுமின்றி இசைக்கேற்ப ஆட்டம் ஆடப்படுகிறது. ஆனால் ஒயிலாட்டத்தில் பாடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான், மிகப் பெரும் பிரச்சார ஊடகமாக ஒயிலாட்டம் திகழ்ந்து வருகிறது. வெறும் புராணக் கதைகளை மட்டும் பாடி ஆடாமல், மக்களுக்குத் தேவையான கருத்துகளைப் பாடி ஆடும் வழக்கம் ஒயிலாட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடங்கி இன்றைக்கு அன்றாட மக்கள் படும் அவதிகளையும் தம்முடைய கலையின் வழியாக பாமரனுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒயிலாட்டக் காரர்கள் கடத்தி வருவது இதன் ஊடகச் சிறப்பிற்கான உதாரணமாகும். சாதி மறுப்பு, மத நல்லிணக்கம், தொழிலாளர் பிரச்சினைகள், மது ஒழிப்பு, வியாபாரமாகும் கல்வி போன்ற சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வையும் அதற்கான தீர்வையும் கலையின் வழியாக இன்றைய ஒயிலாட்டங்கள் எதிரொலிக்கின்றன.

ஆகவே தான், பல மாற்றங்களைக் கொண்டாலும், தமிழக நாட்டார் கலைகளுள் குறிப்பிடத் தகுந்ததாக ஒயிலாட்டம் விளங்கி வருகிறது. இந்தக் கலையை மென்மேலும் வளர்த்து, தமிழரின் அடையாளமாக்குவோம்.

3
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu