பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பத்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கு பஜவூர் மாவட்டத்தின் மெஹ் முந் என்னும் பகுதியில் போலியோ தடுப்பூசி முகாம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டனர். இந்த காவல் பணிக்காக 25 காவல்துறையினரை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தின் அருகே குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் ஐந்து காவல் துறையினர் பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர். பஜவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்த காவல்துறையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த குண்டு வீச்சு சம்பவத்தினால் நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
இதுபோன்ற தாக்குதலால் காவல்துறையினரின் மன உறுதி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று அந்த மாகாண காபந்து முதல்வர் அர்ஷத் கூறினார். இன்னும் சில தினங்களில் பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.