ரகசிய காப்பு வழக்கில் இம்ரான் விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு எதிராக ரகசிய காப்புறுதியை மீறியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதிலிருந்து அவர்களை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. கடந்த 2022 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் தோல்வி அடைந்து அவர் பிரதமர் பதவியை இழந்தார்.
அதற்கு முன்னதாக அரசுக்கு எதிராக அந்நிய சக்திகள் திட்டம் தீட்டுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு ஆதாரம் அளிக்கும் விதமாக பொதுக்கூட்டம் ஒன்றில் அமெரிக்காவும் பாகிஸ்தான் தூதரகமும் மேற்கொண்ட தகவல் பரிமாற்ற ஆவணத்தின் ஒரு பகுதியை காட்டினார். இதன் மூலமாக ரகசிய காப்புறுதியை மீறியதாக அவர் மீதும் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி மீதும் இஸ்லாமாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இம்ரான் சார்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. எனினும் இம்ரானுக்கு எதிராக ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.