பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புகளுக்கு, அவசரக்கால நிவாரணமாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏசியன் டெவலப்மென்ட் வங்கி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாடு, கடந்த இரு மாதங்களாக, கனமழையால் தீவிர பாதிப்படைந்துள்ளது. திடீர் காட்டாற்று வெள்ளங்கள், நிலச்சரிவுகள், பனிப்பாறை உருகுதல் போன்ற இயற்கைப் பேரழிவுகள் அங்கு தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. சுமார் 60 சதவீத சராசரி பருவமழை மூன்றே வாரங்களில் இங்கு பெய்துள்ளது. இதனால், அங்கு 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விளைநிலங்கள் மற்றும் கால்நடைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. அந்நாட்டின் 33 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் அரை மில்லியன் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவில் இருந்து மீண்டுவர, பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில், ஆசிய பசிபிக் பேரிடர் நிவாரண நிதி நிதியில் இருந்து, பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புகளுக்காக ஏசியன் டெவலப்மென்ட் வங்கி சார்பில், 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணம் வழங்கப்படுகிறது. "உடனடி தேவைகளான உணவு, கூடாரம் அமைத்தல், நிவாரணப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றிற்காக இந்தத் தொகை பயன்படுத்தப்படும்" என்று ஏடிபி வங்கி, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. "இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தான் மக்களுடன் ஏடிபி துணை நிற்கும். அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, இயற்கைப் பேரிடரில் இருந்து பாகிஸ்தான் குடும்பங்களை மீட்டெடுக்க நாங்கள் முயற்சிக்கிறோம்" என்று ஏடிபி வங்கியின் மத்திய மற்றும் மேற்கு ஆசியா பிரிவின் நிர்வாக அதிகாரி யேவ்கிநின் ஜுகோ தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கிட நிறுவனம் முயற்சி செய்து வருவதாக ஏடிபி யின் பாகிஸ்தான் பிரிவின் தலைவர் யோங் யே தெரிவித்துள்ளார்.