பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இது இஸ்லாமியர்களின் புனிதமான ரமலான் மாதம் என்பதால், பொதுமக்கள் உணவிற்காக மிகவும் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், கராச்சியில் உள்ள பொது விநியோக மையத்தில், ரம்ஜான் நோன்பிற்கான இலவச உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, மின்கம்பியை மிதித்து இருவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. இதில், ஏற்பட்ட அச்சம் மற்றும் பீதியால், மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்னர், இலவச கோதுமை மாவு பெறுவதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் பதிவான நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.