பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக அவருக்கு கிடைத்த பரிசுகளை விற்று சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் அரசு ரகசியங்களை கசிய விட்டதாகவும் வன்முறையை தூண்டியதாகும் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் ஒவ்வொன்றாக இவர் ஜாமீன் மற்றும் விடுதலை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவருடைய கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவருடைய கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதற்கிடையே இவருடைய தெக்ரிக்-இ-இன்சப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான அரசு முடிவு செய்துள்ளது. தேச விரோத செயல்களில் இந்த கட்சி ஈடுபடுவதாக அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த கட்சியின் மீதான தடை விரைவில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் போராட்டம், கலவரம் போன்றவை ஏற்படும் என்று பரவலாக கருதப்படுகிறது.