பாகிஸ்தானில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷெஹ்பாஸ் ஷரீஃப் பிரதமராக பதவியேற்றார். அவரது பதவி காலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இதனை அடுத்து இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் என்பவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அந்நாட்டுக்கான பொது தேர்தல் குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எந்த உறுதியான தகவலையும் வெளியிடாமல் இருந்ததால் அங்கு குழப்பம் நிலவியது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதோடு தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும். இதற்குப் பிறகு 54 நாள் தேர்தல் பணிகள் நடைபெறும். அதன் பிறகு ஜனவரி கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்களவையில் மொத்தம் 342 உறுப்பினர்கள். இதில் 272 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். இவையின்றி, 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.