பாகிஸ்தானில் ஃபட்டா-2 ஏவுகணை தளவாடத்தின் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தது.
பல ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட ஃபட்டா-2 ஏவுகணை தளவாடத்தை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதித்தது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது,
ஃபட்டா-2 ஏவுகணை தளவாடத்தின் சோதனை நேற்று நடைபெற்றது. அதில் அந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.
உயர்திறன் கொண்ட வழிகாட்டு கருவிகளும், அதிநவீன மின்னணு சாதனங்களும் அந்த ஏவுகணை தளவாடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் 400 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று இலக்குகளை தாக்கும். இந்த ஏவுகணை சோதனையை பாகிஸ்தானின் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் கோரி ஏவுகணை தளவாடத்தை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது. அதோடு ஃபட்டா 1 ஏவுகணை தளவாடம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.