வரும் மே 12ஆம் தேதி, சிறையில் உள்ள 199 இந்திய மீனவர்களை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கராச்சி சிறையில், அத்துமீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 654 இந்திய மீனவர்கள் உள்ளனர். அவர்களில் 631 பேர் தண்டனை காலத்தை நிறைவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நல்லெண்ண நடவடிக்கையாக 199 இந்திய மீனவர்களை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மீனவர்களை விடுவிப்பது தொடர்பான ஆவணங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விடுவிக்கப்படும் இந்திய மீனவர்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுபவர் என கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுடன் சேர்த்து இந்திய சிவில் கைதியான சுல்பிகர் விடுவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சிறைகளில், கைதிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதற்கு போதிய வசதி இல்லாததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.