பாகிஸ்தானில் சிறைச்சாலை மீது தாக்குதல் நடந்ததில் 6 பயங்கரவாதிகள் பலியாகினர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மார்க் என்னும் நகரில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனை பாகிஸ்தான் ராணுவத்தினர் இடைமறித்து தாக்கினர். அதோடு பயங்கரவாதிகள் அருகில் உள்ள ராணுவ முகாம் மற்றும் ரயில் நிலையங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த மூன்று தாக்குதல்களையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் வீசிய ஏவுகணைகள் எதுவும் இலக்கை துல்லியமாக தாக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் சிறையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுவர்கள் மட்டும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அஸ்லாம் அச்சோ குழு பொறுப்பேற்றுள்ளது. மார்க் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் உட்பட 800 கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.