பாகிஸ்தான் நாட்டு சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதி, அந்நாட்டின் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கு, கடந்த ஜூன் மாதம் வரையிலான தங்களது சொத்து மதிப்பு விவரங்களை தாக்கல் செய்ய, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவகாசம் நிறைவடைந்த பின்னர், சொத்து விவரங்களை சமர்ப்பிக்காதவர்கள் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறிய 271 உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. இதில் 136 பேர் நாடாளுமன்ற கீழவையை சேர்ந்தவர்கள். 21 பேர் மேலவையை சேர்ந்தவர்கள். மேலும், 114 பேர் தனிப்பட்ட மாகாணங்களின் பேரவை உறுப்பினர்கள் ஆவர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சொத்து மதிப்பு கணக்கை தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு, இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்டதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.