பாகிஸ்தானின் 2வது பெரிய கப்பல் படை மற்றும் விமானப்படை தளம் துருபத் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
துருபத் கப்பல் படை மற்றும் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் மஜீத் ராணுவ பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இந்த இயக்கம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை சீனா மற்றும் பாகிஸ்தான் சுரண்டி வருவதாக குற்றம் சுமத்தி வருகிறது. அதன் பொருட்டு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. ஏற்கனவே, குவாதார் துறைமுகத்தில் இந்த இயக்கம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், துர்பத் படைத்தளத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவத்தினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.