பழந்தமிழர் வீடுகள்

உலகின் பல இடங்களிலும் நாடோடி வாழ்க்கை முறை வழக்கக்தில் இருந்த சமயத்திலேயே தமிழர்கள் இயற்கையின் சூழலுக்கு ஏற்றவாறு குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழும் நாகரிகம் கொண்டிருந்தனர். மேலும் பழமையானக் குடியிருப்புகள் பற்றியத் தகவல்களைத் தேடிச் சென்றால், பல்வேறு நாடுகளிலும் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகளைப் பற்றியக் குறிப்புகளே கிடைக்கின்றன. ஆனால் நம் தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதனின் குடியிருப்புப் பற்றியத் தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்களே சமூகத்தின் ஆணிவேர் ஆவார்கள். அவர்களின் குடியிருப்பு அந்தச் […]

உலகின் பல இடங்களிலும் நாடோடி வாழ்க்கை முறை வழக்கக்தில் இருந்த சமயத்திலேயே தமிழர்கள் இயற்கையின் சூழலுக்கு ஏற்றவாறு குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழும் நாகரிகம் கொண்டிருந்தனர். மேலும் பழமையானக் குடியிருப்புகள் பற்றியத் தகவல்களைத் தேடிச் சென்றால், பல்வேறு நாடுகளிலும் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகளைப் பற்றியக் குறிப்புகளே கிடைக்கின்றன. ஆனால் நம் தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதனின் குடியிருப்புப் பற்றியத் தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்களே சமூகத்தின் ஆணிவேர் ஆவார்கள். அவர்களின் குடியிருப்பு அந்தச் சமூகத்தின் அடையாளமாகும். அவர்களின் குடியிருப்புகள் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் கண்டு வளர்ந்து வந்ததை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது.

குறிஞ்சிநிலக் குடியிருப்பு

குறிஞ்சி நில மக்களே ஆதி மனிதர்களாவர். மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியில் வாழ்ந்த அம்மக்கள் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தவர்கள். தொடக்கக் காலத்தில் குகைவாழ் மக்களாக இருந்தவர்கள். தினை, வரகு முதலிய பயிர்களைப் பயிரிட்ட பொழுது தினைப்புனக் காவலுக்குப் பரண் கட்டுவதுபோலத் தம் குடிசைகளையும் பரண் அமைப்பில் கட்டிக் கொண்டனர். அடுத்தகட்ட வளர்ச்சியாக மலைப்பாங்கான பகுதிகளில் கூம்புடன் கூடிய வட்டத் தரையமைப்பில் குடிசைக் கட்டி வாழலாயினர். தாம் வாழும் குடிசைக்காகப் பாறைக் கற்களையும் மூங்கிற்கம்புகளையும், தினைத்தாள் மற்றும் வரகுத்தாள்களைக் கூரைவேயவும் பயன்படுத்திக் கொண்டனர். இப்போதும் நீலகிரி மலைப்பகுதிகளில் இவ்வாறான அமைப்புக் கொண்ட வீடுகளைக் காணலாம். மேலும்,

"குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமைப் பழுவினிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்"

என்றப் புறநானூற்றுப் பாடல் குறிச்சி நில வீடுகளின் மூன்றில் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது.

முல்லைநிலக் குடியிருப்பு

மனிதன் தன் தொழிலுக்காக விலங்குகளைப் பழக்கப்படுத்தியது அடுத்தக் கட்ட வளர்ச்சியாகும். காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், முதலில் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மரங்களில் பரண்கள் கட்டி வாழத் தொடங்கினர். பிறகு, மரக் கிளைகளையோ மூங்கிலையோ நட்டும், வலுவான மரக் கம்புகளையும், இலைகளையும் பரப்பியும் குடிசை அமைத்தனர். கம்புகளாலான தட்டியைக் குடிசைக்கு வாசலாக அமைத்துக் கொண்டனர். கூரையுடன் கூடிய குடிசையை அமைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய அவர்கள், தம் குடிசைக்கு முன்புள்ள முற்றத்தில், தாம் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கும் கொட்டகைக் கட்டி, அவை தங்க வழி செய்தனர். பின்னர் செங்கற் சுவரெழுப்பிக் கூரை அமைத்து, கட்டடம் என்ற ஒருவகை அமைப்பை உண்டாக்கிக் கொண்டனர். கொட்டகையுடன் கூடிய குடியிருப்பு நாகரிக வளர்ச்சியின் அடுத்தநிலையாகும்.

“இடுமுள்வேலி முடக்கால் பந்தர்
புதுக்கலத்து அன்ன செவ்வாய் சிற்றில்”

என்றப் பாடல் வரிகள் இவ்வகை வீடுகளுக்குச் சான்றாகும்.

மருதநிலக் குடியிருப்பு

வேளாண்மை செய்து உணவு விளைவித்தது மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்தப் படிநிலை. அவ்வகை உழவர்கள் வாழும் மருத நிலத்தில் நீர்வளம் மிகுதியாகக் காணப்படும். அவர்கள் களிமண்ணால் சுவர் எழுப்பி், தென்னை ஓலைகளால் கூரைவேய்ந்து வாழத் தொடங்கினர். பின்னர் செங்கல்லால் வீடு கட்டியும், கம்புகளைக் கொண்டும் புல், வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டும் கூரை அமைத்தும் வாழலாயினர். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் வகையில் தூண்கள், முற்றம், தாழ்வாரம் முதலிய உட்பிரிவுகளும் கட்டப்பட்டன. தானியங்களைச் சேமித்து வைக்கக் குதிர்களைக் கட்டினர். இந்த அமைப்பில் இன்றும் நமது கிராமங்களில் வீடுகளைக் காணலாம். திண்ணையுடன் கூடிய இந்த வகை வீடுகளை “தெற்றிப் பாவை திணி மணல் அயரும்" என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

நெய்தல்நிலக் குடியிருப்பு

மீன் பிடித்தும், மீன் வற்றல் (கருவாடு) விற்றும் வாழ்க்கையை நடத்திய நெய்தல் நில மக்கள் பனை அல்லது தென்னை மர வாரைகளை நட்டுப் பனைமடலாலோ தென்னங்கீற்றாலோ கூரைப் போட்டு, குட்டையானக் குடிசைகளில் வாழ்க்கையை நடத்தினர்.

பாலைநிலக் குடியிருப்பு

வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்தும் இவர்கள் பெரும்பாலும் கூடாரம் அமைத்துக் கொண்டு, பல இடங்களுக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தனர்.

இவ்வாறு இலக்கியங்கள் மூலம் தமிழர்களின் நாகரிக வளர்ச்சியை அறிய முடிகிறது. மேலும், மனிதன் ஓரிடத்தில் நிரந்தர வாழிடம் அமைத்த வரலாறு இதன் மூலம் தெளிவாக அறியப்படுகிறது.

2
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu