தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய விளையாட்டுகளில் முதன்மையானதாகப் “பல்லாங்குழி” இடம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர் 'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்' என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் 'பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)' என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடி மக்களிடம் விளங்கி வருகிறது என்பதை அந்த நூலில் பல சான்றுகளோடு விளக்கியுள்ளார்.
பல்லாங்குழி விளையாட்டுச் சாதனத்தில் பதினான்கு குழிகள் இருப்பதால் “பதினான்கு குழி விளையாட்டு” என்பதை “பன்னாங்குழி” என அழைத்தனர். பின்னர் “பல்லாங்குழி” என அழைக்கப்பட்டது என்பது பொதுவான கருத்தாகும்.
நிலத்தில் குழிகள் தோண்டிப் பல்லாங்குழி ஆடுவது வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே கிராமங்களில் நடைபெற்று வருவது நோக்கத்தக்கது. தமிழ் இலக்கியத்தில் பல்லாங்குழி விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.
"வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன" என்ற கலித்தொகைப் பாடல் வரி பல்லாங்குழிப் பலகையையே குறிக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
தமிழகம் தாண்டிப் பல நாடுகளிலும் பல்லாங்குழி விளையாட்டு இன்றளவிலும் விளையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பல்லாங்குழி முக்கிய விளையாட்டாகும். ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றின் தேசிய விளையாட்டே பல்லாங்குழி தான். தமிழர்களே இந்த விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் சான்றுகளோடு நிறுவியுள்ளனர்.
அவற்றுள் சில:
"ஓலப்" என்ற இன மக்கள் பல்லாங்குழி விளையாட்டை "ஊரே" என்ற சொல்லால் குறிக்கின்றனர். தமிழ் இலக்கியத்தில் "ஓரை" என்ற சொல் விளையாட்டைக் குறிக்கும்.
வெஸ்ட் இண்டீஸ், டச்சு கயானாவில் வாழும் பழங்குடி மக்கள் இரவில் இவ்விளையாட்டை விளையாடுவதில்லை. தமிழகத்திலும் சில இடங்களில் இரவில் இந்த விளையாட்டு விளையாடப்படுவதில்லை.
"பேள்" என்ற இன மக்கள், பல்லாங்குழி விளையாடப் பயன்படுத்தப் படும் காய்களை "காயே" என்று அழைக்கின்றனர். தமிழில் வழங்கப்படும் அதே பெயரால் வேறு இடத்தில் வழங்கப்படுவது தமிழர்களே இந்த விளையாட்டைப் பிற நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர் என்பதற்குச் சான்றாகும்.
இந்த விளையாட்டு மதி நுட்பத்தோடு விளையாடப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், ஆப்பிரிக்காவில் தங்கள் தலைவனையோ அரசனையோ தேர்ந்தெடுக்க பல்லாங்குழி விளையாட்டையே பயன்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 18 குழிகளைக் கொண்ட பலகை அமைப்பு "பல்லபெட்டா" என்ற இடத்தில் உள்ள விஹாரக் கோவிலில் காணப்படுகிறது. இது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த விளையாட்டு விளையாடப்பட்டதற்குச் சான்றாகும்.
இந்த விளையாட்டை விளையாடுவதால் எண்கள் குறித்த அறிவு மிகுதியாகப் பெறப்படுகிறது. ஓரிடத்தில் உள்ள செல்வத்தைப் பிரித்து, அனைவருக்குமாய் வழங்கும் ஈகை குணம் வளர்கிறது. மேலும் தலைமைப் பண்புக்கு இன்றியமையாததாய் வேண்டப்படும் பிரித்தாளும் திறன் மேம்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் உட்பொதிந்துள்ள உண்மைகளை உணர்ந்து எதிர்காலச் சந்ததியினருக்கும் இந்த விளையாட்டை எடுத்துச் செல்வோம்.