பந்தாடுதல் - தமிழர் விளையாட்டு

June 21, 2022

சங்கத் தமிழர்கள் பெண்களை வீட்டிற்குள் ...

சங்கத் தமிழர்கள் பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க மனப்பான்மை இல்லாதவர்கள். ‘சிறுமியர் வெளியிற் சென்று, தம் தோழியரோடு விளையாடுவதே அறம்; அவ்வாறு விளையாடுவதால் உடலும் உள்ளமும் ஆக்கம் பெறும்; மாறாக வீட்டிற்குள் இருந்தால் அது அறமும் இல்லை, ஆக்கமும் தேய்ந்து விடும்’ என்ற செய்தியை

“விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்.....”

என்ற நற்றிணைப் பாடல் மூலம் எடுத்துக் கூறுகின்றனர்.

சங்ககாலத்தில் பெண்களால் பெரிதும் விரும்பி விளையாடப்பட்ட விளையாட்டு 'பந்தாட்டம்' ஆகும். இவ்விளையாட்டு வீட்டு முற்றத்திலும், மாடங்களிலும், மணல் மேடுகளிலும் ஆடப்பட்டது. பல பந்துகளை மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்ககால மகளிரின் பந்தாட்டம் ஆகும். பந்தாடும்போது பாட்டும் பாடப்படும். சங்க இலக்கியங்கள் முதல் தற்காலம் வரை, எண்ணற்ற பாடல்களில் பந்தாட்டம் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, “தந்தை இடனுடை வரைப்பின் ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி” என்ற நற்றிணைப் பாடல் வரியும், ‘‘பந்தடித்தனளே வசந்தவல்லி பந்தடித்தனளே’’ என்ற குற்றாலக்குறவஞ்சிப் பாடல் வரியும் பந்தாடுதல் என்ற விளையாட்டு பரவலாக விளையாடப்பட்டதை உறுதி செய்கின்றன.

நீரில் விளையாடப்பட்டப் பந்தாட்டம் 'நீர்ப்பந்தாட்டம்' என அழைக்கப்பட்டது. நீர்ப்பந்தாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பந்து 'பூநீர் பெய் வட்டம்' என்று அழைக்கப்பட்டது. இது ஒரு திளைப்பு விளையாட்டாகும். பலவகை வண்ண நீர்களைத் தனித்தனிப் பந்துகளில் அடைத்து ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்வர். பந்து வீச்சு மோதியதும் உடையும் தன்மை உடையதாக இருக்கும். உடைந்ததும் உள்ளிருக்கும் வண்ணநீர் பந்து பட்டவர்மீது ஒழுகும். இதுவே இந்த விளையாட்டின் முறையாகும்.

பந்தாடுதல் என்ற விளையாட்டைப் பற்றி கி.பி.6ஆம் நூற்றாண்டில் தோன்றிய 'பெருங்கதை' என்னும் நூலில் "பந்தடி கண்டது" என்னும் காதையில் விரிவாகச் சொல்லப்படுகிறது. மூவர், ஐவர் எனக் கூடி இந்த விளையாட்டை விளையாடும்போது அது 'அம்மானை' என அழைக்கப்பட்டது. அம்மானை அண்மைக்காலம் வரையில் தஞ்சைப்பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்திருக்கிறது. மேலும் பெண்பாற் பிள்ளைத் தமிழில், "அம்மானைப் பருவம்" என்பது, இந்த விளையாட்டைக் குறிப்பதாகும். தமிழகப் பெண்களிடம் இந்த விளையாட்டு எந்த அளவிற்கு ஒன்றிப்போய் இருந்தது என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

ஏதோ ஒரு பொதுவான செய்தியையோ, அரசன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டே “அம்மானை“ எனப்பட்டது. இந்த விளையாட்டின் மூலமே பல மன்னர்களின் சிறப்பு அறியப்படுகிறது. உதாரணத்திற்கு, கி.பி.1640 ஆம் ஆண்டைச் சேர்ந்த 'இராமப்பய்யன் அம்மானை' மூலம் நாயக்கர் வரலாற்றை அறிய முடிகிறது. மேலும், 'திருவாசகம் - திருவம்மானை', 'கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை' என்று இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடி, ஆடிய அம்மானைகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாய்க் கிடைக்கின்றன.

இவ்வாறு பந்தாட்டம் மகளிரின் மன ஒருமைப்பாட்டுக்காவும், விரைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும், கவனக் குவிவு பெறவும் விளையாடப்பட்டது. இன்றும் சிறுவர்களின் விளையாட்டுகளில் பந்து முக்கிய இடம் வகிக்கிறது. சிறுவர் சிறுமியரை இது போன்ற பந்தாடுதல் விளையாட்டுக்கள் விளையாட ஊக்குவிப்போம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu