தமிழக எல்லையில் சட்ட விரோதமாக கொட்டப்படும் கழிவுகள் தொடர்பாக அறிக்கை பெற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆனைமலை பகுதியில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதன் அடிப்படையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால், ஆனைமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது. அப்போது அங்கு கடும் துர்நாற்றம் வீசியதாக கூறப்பட்டுள்ளது.
கழிவுகளின் மாதிரிகளை, வேளாண் பல்கலை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதுகுறித்து எந்த பகுப்பாய்வு அறிக்கையும் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதை பெற, தமிழக அரசும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 8-ம் தேதி நடக்கும் என உத்தரவிட்டுள்ளனர்.