10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது. தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது. சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியம் ஆகும். புதிய விமான நிலையம் அமைப்பதால் புதிய வழித்தடங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் விளைநிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரந்தூரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலை கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கிராம மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவு அளித்துள்ளார் என்று அவர் விளக்கம் அளித்தார்.