கடனை திருப்பிச் செலுத்த திறன் இருந்தும் கடனை செலுத்தாத பணக்காரர்கள் பட்டியலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பட்டியலில், முதல் 50 இடங்களில் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டுமே 87295 கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் அடிப்படையில், இந்த விவரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில், அமைச்சர் பகவத் காரத் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
திறன் இருந்தும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில், கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெஹுல் சோக்சி முதலிடத்தில் உள்ளார். அவரது கடன் தொகை 8,738 கோடி ரூபாய் ஆகும். இரண்டாம் இடத்தில் எரா இன்ஃப்ரா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இதன் கடன் மதிப்பு 5750 கோடி ரூபாய் ஆகும். அடுத்தடுத்த இடங்களில், ஆர் இ ஐ அக்ரோ லிமிடெட், ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட், கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடன் மதிப்பு 5148, 4774, 3911 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.