பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுரீந்தர் சாவ்லா தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், பேடிஎம் பங்குகள் 3% வரை வீழ்ச்சியடைந்தன.
சுரீந்தர் சாவ்லா, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த ஏப்ரல் 8ம் தேதி அவர் பதவியில் இருந்து விலகினார். நிறுவனத்தின் விதிமுறைகளின் படி, வரும் ஜூன் 26 ஆம் தேதியில் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்” என்று ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1 முதல், பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. மேலும், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிறகு சுரீந்தர் சாவ்லா வெளியேறி உள்ளது கவனிக்கத்தக்கது.