பேடிஎம் நிறுவனத்தின் வங்கி செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது. இதனால், பேடிஎம் நிறுவன பங்குகள் இம்மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்து, வரலாற்று வீழ்ச்சியை அடைந்தது. ஆனால், கடந்த 2 அமர்வுகளாக பேடிஎம் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தொடர்ச்சியாக, இரண்டாம் வர்த்தக நாளாக, அப்பர் சர்க்யூட் மதிப்பை எட்டி உள்ளன. கிட்டத்தட்ட 10% அளவுக்கு பேடிஎம் பங்குகள் உயர்ந்துள்ளன.
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. அதன்படி, வர்த்தகர்களுக்கான கட்டணங்களை ஆக்சிஸ் வங்கி மூலம் நிறைவேற்ற உள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு தான், பேடிஎம் நிறுவன பங்குகள் உயரத் தொடங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நாளில் பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 358 ரூபாய் அளவில் வர்த்தகமானது.