நடப்பு ஆண்டில் சர்வதேச அளவிலான கார்பன் உமிழ்வு 4060 டன் அளவை எட்டும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.
எகிப்தில் நடைபெற்று வரும் 27ஆவது பருவநிலை மாநாட்டில், ‘சர்வதேச கார்பன் பட்ஜெட்’ என்ற ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்த தகவலை ஐநா தெரிவித்துள்ளது. மேலும், கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இன்னும் 9 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில், சர்வதேச அளவில் கார்பன் உமிழ்வு 1.7 சதவீதமும், இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 6 சதவீதமும் உயரும் என்று தெரிவித்துள்ளது. சீனாவில் பொது முடக்கம் தொடர்வதால் அங்கு கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, போக்குவரத்து அதிகரித்து உள்ளதால், கார்பன் உமிழ்வு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த அறிக்கையில், வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவை செயற்கைக்கோள் அளவீடுகள் கொண்டு கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி ஆகியவற்றின் செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் திட்டங்கள் தீட்டப்படும் என்று கருதப்படுகிறது.