மெரினாவில் அமையவுள்ள கருணாநிதியின் பேனா நினைவு சின்ன மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியின் பேனா நினைவு சின்ன மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. கடலில் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளது. பேனா சிலைக்கு செல்லும் பாலம் கடல் அலை வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும், பேனா நினைவுச்சின்னத்தின் கீழ் கருணாநிதி கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.