பல்வேறு வட இந்திய நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில மணி நேரங்களில் பெய்த அதி கனமழை, நகரத்தை சீர்குலைய செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறுகிய நேரத்தில் அதி கனமழை பெய்யும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்ததால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு மாறுமாறு கேட்டுக் கொண்டதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. தெருக்களில் வெள்ளம் மற்றும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்வது போன்ற காட்சிகள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆரஞ்சு கவுண்டியில் சில மணி நேரங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன், வெஸ்ட் பாயிண்ட், தென்கிழக்கு நியூயார்க் போன்ற பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக, நியூயார்க் நகரில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்தது.