முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ள முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட அம்மாநில வனத்துறை கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. ஆனால் கேரள மாநில அரசு திடீரென அந்த அனுமதியை ரத்து செய்தது. மேலும் வல்லக்கடவு வழியாக செல்ல 5 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
அணையின் பராமரிப்பிற்கு தேவையான கட்டுமான இயந்திரங்களை கொண்டு செல்லவும், அணை அமைந்துள்ள பகுதியில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் கருவிகளை அமைக்கவும், அங்குள்ள பழைய படகுகளுக்கு மாற்றாக புதிய படகுகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது மனுவில் கூறியுள்ளது.