கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணிகளும், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் 5 கட்டமாக அகழாய்வு பணிகளும் நடந்துள்ளது. இந்த அகழாய்வுகளின்போது சூது பவளம், உறை கிணறுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு, ஒரு இஞ்ச் பானை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியத்தை தினமும் ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
தற்போது அருங்காட்சியகம் திறக்கப்பட்டு விட்டதால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கீழடியில் 9-ம் கட்டமாக அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.