தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் படகுகளை சீனக் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்சீனக் கடல் பகுதி உலகின் பரப்பரப்பான வர்த்தக கடல் பாதைகளுள் ஒன்றாகும். இதற்கு சீனா முழு உரிமை கொண்டாடி வருகிறது. அதே சமயம் வியட்நாம், தைவான், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் நீண்ட காலமாக இந்நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள ஷால் பகுதியில் சீன கடற்படை சில மிதக்கும் தடைகளை நிறுவி வைத்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் வரும் படகுகளை தடை செய்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் அந்த தடைகளை அகற்றினார். பின்பு இரண்டு விநியோக படகுகளை சர்ச்சைக்குரிய ஷால் பகுதிக்கு பிலிப்பைன்ஸ் கடற்படையினர் அழைத்துச் சென்றனர். அப்போது சீன கடற்படை அந்த படகுகளை தடுத்து நிறுத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி கில்பர்ட் கூறுகையில், தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் பிரச்சினைக்குரியதாக உள்ளது. இதற்கு பதில் அளிக்க பிலிப்பைன்ஸ் தயாராக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார்.