ஒழுங்குமுறை ஆணைய அனுமதியின்பேரில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள அனுமதியின்பேரில், மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கவும், கடன் அளவை குறைப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.