சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அமைச்சர் நிதின் கட்கரி தனது பதில் கடிதத்தில், நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது. சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.