பிளஸ்-2 தேர்வு முடிவு மே 5-ந் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், அரசு பொதுத்தேர்வு மார்ச் 13-ந் தேதி தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே ஒரு திருப்புதல் தேர்வு முடிந்துள்ளது. பிப்ரவரி மாதம் 2 திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை முடித்து விடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கும். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 5-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 19-ந் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 17-ந் தேதியும் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.