இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் சேவை (ரேபிட் எக்ஸ்) இன்று தொடங்கப்பட்டுள்ளது. நமோ பாரத் என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து மீரட் வரையிலான பிராந்திய விரைவு ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது காசியாபாத் வழியாக செல்கிறது. முதற்கட்டமாக, 17 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 82 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தில், ரேபிட் எக்ஸ் ரயில் சேவைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் 2025 ஆம் ஆண்டில், இந்த ரயில் சேவை முழுவதுமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, 82 கிலோமீட்டர் தொலைவை ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நமோ பாரத் ரயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிவதாக இருக்கும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.