மக்களவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், பிரதமர் மோடி சென்னையில் ரோடு ஷோ நிகழ்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக, 4 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் ஏப்ரல் 9ம் தேதி தமிழகம் வரும் அவர், அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்த்த உள்ளார். அதன் பிறகு, ஹெலிகாப்டரில் சென்னை வரும் அவர், திறந்த காரில் நந்தனம் வழியாக பனகல் பூங்கா வந்து, பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோவில் ஈடுபட உள்ளார். கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நிகழ உள்ளது. இதை ஒட்டி, சென்னை முழுவதுமே ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. சென்னை ரோட் ஷோவை தொடர்ந்து, ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் மற்றொரு ரோடு ஷோவில் பிரதமர் பங்கேற்கிறார். பிறகு, ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதிகளில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.